அயோக்கியத்தனங்களை மூடிமறைக்கும் இலங்கை அரசாங்கம் - இது முடிவல்ல... கடிதம் மூலம் பகிரங்க எச்சரிக்கை!


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் இது போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே எனவும் மக்களின் போராட்டம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது எனவும் வசந்த முதலிகே தனது பகிரங்க கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, 

“வாழ்வுரிமையை உறுதி செய்ய போராட்டத்தை தேர்வு செய்ய வேண்டும், இதை அடைவதற்கு மாணவர் இயக்கம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றது.

உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் வேளையில், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் சிறையில் வாடுகின்றனர்.

அதுமட்டுமன்றி சமுதாய நலனுக்காகவும், நாட்டில் பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காகவும் போராடிய நாங்கள் ஜனவரி 1ஆம் திகதியுடன் 135வது நாள் சிறைவாசத்தை அனுபவிக்கின்றோம்.

இதே கோரிக்கைக்காக போராடியவர்கள் இன்னும் பலர் சிறையில் வாடுகிறார்கள். நெருக்கடியின் காரணமாக நடுத்தர மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலைமை சமூகத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்தை முற்றாக அழித்துவிடும், மக்கள் போராட்டத்தின் அபிலாஷைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ரணில் ராஜபக்ச, முன்பை போன்றே தொடர்ந்தும் செயற்படுகின்றார்.

தமது தோல்விகளையும், அயோக்கியத்தனத்தையும் மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கம் மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பாரிய அவதூறு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

அரசாங்கம் இத்தகைய அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்தாலும் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்” என வசந்த முதலிகே அந்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.