மேலும் ஆபத்தாக மாறிய இலங்கை நிலைமை - சர்வதேச செஞ்சிலுவை குழு தகவல்

இலங்கையில் மேலும் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை குழு மற்றும் செம்பிறை குழு ஆகியவை இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுள்ளன.

குறித்த மதிப்பீட்டின் போது இலங்கையின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் உள்ள 2900 குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏதோ ஒருவகையில் 96 வீத பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் போசாக்கு ஆகியவை முக்கிய கரிசனைக்குரிய விடயங்களாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உடல் ரீதியான பாதுகாப்பு மோசமடைவதாகவும், பெண்கள், சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகள் அவதானத்துக்குரியதாக மாறியுள்ளதாகவும் குறித்த மதிப்பீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில், உணவை பெற்றுக்கொள்வதில் கவலையளிக்கும் விதத்தில் பெரும் நெருக்கடி காணப்படுவது சர்வதேச செஞ்சிலுவை குழுவின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதிக விலை வருமான அழுத்தங்கள் அல்லது போதியளவு உணவின்மை போன்றன இவற்றிற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வாழ்வாதார இழப்பு என்பன வாழ்க்கை செலவீனங்களை சமாளிப்பதற்கான மக்களின் திறனில் இரண்டு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான இழப்பு குறிப்பிடத்தக்க அளவு உணவுப்பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளதுடன், பணவீக்கம் காரணமாக மருந்துகளின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய சுகாதாரசேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

உடனடி மனிதாபிமான தலையீடுகள் மேற்கொள்ளாவிட்டால் மக்கள் மீதான தாக்கம் நீண்ட காலத்திற்கு காணப்படும் என செஞ்சிலுவை குழுவின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மக்களின் வாழ்க்கை உயிர்வாழ்தலிற்கான போராட்டத்தில் தோற்பதை போன்று காணப்படுவதாக இலங்கை செஞ்சிலுவை குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஸ் குணசேகர தெரிவித்துள்ளார்.