கள்ளன் - காவல்துறை விளையாட்டை விளையாடும் ரணில் - ராஜபக்‌சாக்கள்


மக்கள் தொடர்பில் பசில் ராஜபக்‌ச மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாகத் தெரிவிக்கும் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ரணில் - ராஜபக்‌ச ‘திருடன் -காவல்துறை’ விளையாட்டையே விளையாடி கொண்டிருப்பதாகவும் கேலி செய்தார்.

ராஜபக்‌சாக்களும் ரணில் விக்ரமசிங்கவும் கள்ளன் காவல்துறை விளையாட்டையே விளையாடி வருகிறார்கள். ரணில் - ராஜபக்‌சர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதும் ராஜபக்‌சர்கள் ரணிலுக்குப் பொறுப்புகளை வழங்குவதுமே அரசியலில் இத்தனை காலமாக நீடித்திருந்தது.

எவ்வாறாயினும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இதனை சவாலுக்கு உட்படுத்தினார்கள். இதன் பின்னர், எதிர் எதிர் திசையிலிருந்து கள்ளன் - காவல்துறை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த ரணில் - ராஜபக்‌சாக்கள் ஓர் இடத்துக்கு வந்துள்ளனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுகளை நன்கு அவதானித்தால், அவர் போராட்டக்காரர்களுக்கும் சோஷலிச முன்னிலைக் கட்சிக்கும், காவல்துறை ஆணைக்குழுவுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குமே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

உண்மையில், ​பசில்ராஜபக்‌ச, மக்கள் மீது மிகுந்த அச்சத்தில் இருக்கிறார். ஜூலை 09ஆம் திகதி போராட்டத்துக்கு சுமார் 10 இலட்சம் பேர் வந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், விபசாரத்தில் ஈடுபடுபவர்கள் என​ அனைவரும் இருந்தார்கள். நாட்டின் அரசியல் தொடர்பில் பேசுவதற்கு அவர்களுக்கும் உரிமை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.