வெசாக் தினத்தன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கைதியான அதுல திலகரத்னவை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த கைதி பிறிதொரு வழக்குக்காக மீண்டும் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பினைப் பெற்றதாக தெரிவித்து குற்றப்புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இவர் அநுராதபரம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக, அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக நிலுவையில் உள்ள மற்றுமொரு வழக்கு தொடர்பாக நேற்று அவர் அநுராதபுரம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு விசாரணையின் போது அவரது சட்டத்தரணியுடன் அதுல திலகரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், தாம் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளதை கையை உயர்த்தி அதுல திலகரட்னவும் உறுதிப்படுத்தியதாக அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, அதுல திலகரத்னவை கைது செய்ய, அவரை தேடி வந்ததாகக் கூறப்படும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவினரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை முடிந்ததும், அதுல திலகரத்ன நீதிமன்ற வளாகத்திற்குள் தனது நண்பர்களுடன் சிரித்து கதைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவர் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளைக் கடந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார் என்றும் அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் குறித்த நபரை குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.