போரில் உயிரிழந்த உறவினரை நினைவுகூர அனுமதிக்கலாம் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இருப்பினும் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பரணகம ஆணைக்குழு கண்டறிந்த விடயங்களை உடன் விசாரித்து, அது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது நட்டஈடு வழங்கவோ ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மனித உரிமைகள், சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் கடுமையான குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் தலைமையில் கடந்த வருடம் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை, கடந்த வருடம் ஜூலை 21ஆம் திகதியன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது அறிக்கையும் சமர்பிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதத்துக்குள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.