ஜேர்மனிக்கு பயணமானார் ஜனாதிபதி - அங்கு வாழும் இலங்கையர்களையும் சந்திக்க ஏற்பாடு

ஜேர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.



 ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜூன் இன்று முதல் எதிரவரும்  13ஆம் திகதி  வரையில்,   ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.


இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனியின் ஜனாதிபதி, சான்சலர், கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாட்டினதும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் புதிய வழிகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.


மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்தில் இலங்கையின் பொருளாதார மாற்றம், முதலீட்டு வாய்ப்புகள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் வலிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் தொழில் சங்கங்கள்  பிரதிநிதிகளையும் மற்றும் அங்கு வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.


இந்த விஜயத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் கலந்து கொண்டுள்ளனர்