செழிப்பான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு என்னோடு ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொட்டு சின்னத்தில் வேட்பாளரைக் களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்ததையடுத்து, பெரும்பாலான எம்.பி.க்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி
நாட்டை மீட்பதற்கான சவாலான பயணத்தில் என்னுடன் இருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் இருப்பவர்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன். உங்கள் ஆதரவினால் தான் நாங்கள் வெற்றிகரமான ஆரம்பத்தை முன்னெடுத்தோம்.
நாடு நெருக்கடி நிலையில் இருந்தபோது, எரிபொருள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டபோது, நீங்கள் என்னையும் எனது திட்டத்தையும் நம்பினீர்கள். உங்கள் அர்ப்பணிப்பும் நம்பிக்கையும் சவால்களை எதிர்கொள்ளும் போது எங்களுக்கு ஊக்கமளித்தது,
மேலும், எங்களின் முன்னேற்றத்தைக் கண்டு, மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்து, எங்களுடன் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடன் இணைந்தவர்களை வரவேற்கிறோம். கட்சி அரசியல் இல்லாமல் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள்.
இறுதியாக, நமது நாட்டின் எதிர்காலத்திற்கான உங்கள் அர்ப்பணிப்புக்கும், அதற்கான சரியான முடிவுகளை எடுப்பதற்கான உங்கள் தைரியத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பயணம் எளிதானது அல்ல, ஆனால் ஒன்றாகச் சேர்ந்து அதனை இலகுவாக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையான இலங்கையை உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.