சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்த பொலிஸார்! குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம்

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏற்படுத்தியதால்  அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

குறிப்பாக பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது, பொலிசார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அனைத்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர்.

அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் விழாவை மேற்கொள்ள அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

தீமூட்ட தயாரான போது, முல்லைத்தீவு பொலிசார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு பெரும் பதற்றமான நிலைமையேற்பட்டோடு சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.