பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்த சந்தேகநபர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் காரைதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பாறை - காரைதீவு பிரதான வீதியில் வைத்து நேற்று (25.10.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான நபர் அம்பாறை - திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேகநபரிடம் இருந்து 500 போதை குளிசைகள், சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் காரைதீவு பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.