கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
கனடாவிலிருந்து கொழும்புக்கு கூரியர் சேவை வழியாக வந்த உரிமை கோரப்படாத ஒலிப்பெருக்கி (ஸ்பீக்கர்) ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டது.
குறித்த ஒலிப்பெருக்கியினுள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பக்கற்றுகளில் 4 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் புத்தளம் - கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் இருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகளை நேற்றிரவு கைப்பற்றியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட குறித்த போதை மாத்திரைகள், கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்கள் கடற்பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.