மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
நேற்று இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்த்துள்ளமையினால் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.
அதே போன்று நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் இரண்டாம் கட்டைப் பகுதியிலும் பாரிய மரமொன்று வீதியில் வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட்டுது.
மேலும் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.
இதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு இன்று அதிகாலை திறக்கப்பட்டன.
மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.
எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சென் கிளயார், டெவன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதேவேளை கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவி வருகின்றமையினால் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதுடன் வீதிகள் வழுக்கல் தன்மை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.