யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் வேட்பாளராக சொலமன் சிறிலின் பெயர்!

யாழ்.மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சொலமன் சிறிலின் வெற்றிக்காக சகல கட்சிகளிடமும் ஆதரவு கோர தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.யாழ்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

2022 டிசெம்பர் மாதம், யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தமையினைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பினை கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார்.

குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின் வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது.அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டம்  6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு – எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன.

இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.