மாபெரும் பேரணிக்குள் நுழைந்து புலனாய்வாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி



வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய இந்த சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, தடைகளை உடைப்போம், அபகரிக்கப்பட்டுள்ள எமது நிலங்களை திருப்பிக்கொடு, தமிழர் தேசம் எமது அடையாளம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த பேரணி மேற்கொள்ளப்படுகிறது.

குறித்த போராட்ட பேரணி மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக பொலிஸார் அறிவிப்புகளை மேற்கொண்டும் வரும் போதிலும் கூட அதனை மீறி போராட்ட பேரணி மேற்கொள்ளப்படுகிறது.

போராட்டத்திற்குள் நுழைந்து அரச புலனாய்வாளர்கள் தொடர் அச்சுறுத்தலை மேற்கொண்டு வரும் போதிலும் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் புலனாய்வுப் பிரிவினர் சிங்கக் கொடிகளுடன் ஊர்வலத்தின் மத்தியில் ஊடுருவி குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.