தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கஹதுடுவ பொலிஸ் பிரிவின் பொல்கசோவிட்ட பகுதியில், கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நேற்று (21) மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 06 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் வாடகைக்கு செல்வது போன்று முச்சக்கர வண்டிகளில் பயணித்து, சாரதிகளின் முகத்தில் மிளகாய்த் தூள் வீசி முச்சக்கர வண்டிகளைக் கொள்ளையடித்து வந்ததாகத் தெரியவந்தது.
இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் கலவான மற்றும் கஹதுடுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 29 வயதுடைய சந்தேக நபர் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கஹதுடுவ, பொரலஸ்கமுவ மற்றும் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுகளில் முச்சக்கர வண்டிகளைத் கொள்ளையடித்துள்ள நிலையில், 4 முச்சக்கர வண்டிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.