இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை! அம்பாறையில் அரங்கேறிய கொடூரம் Video

இரண்டு பிள்ளைகளை கழுத்தறுத்து  கொலை செய்த தந்தை தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த சம்பவம் தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியிலுள்ள வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் குருதி வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 63 வயதுடைய முஹம்மது மிர்சா முகமது கலீல் தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதுடன் 29 வயதுடைய முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் 15 வயதுடைய முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

கொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில்  பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.