திடீரென பின்னால் வந்த இரசிகர்! திரும்பியதும் பயந்து ஓடிய ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா ரசிகரை பார்த்து மிரண்டு ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


 மும்பை வான்கடேவில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸிடம் தோல்வியுற்றது.

இப்போட்டியில் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே டிரெண்ட் போல்ட் ஓவரில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 125 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பின்னர் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை தொட்டு வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ரசிகர் ஒருவர் அத்துமீறி ஆடுகளத்தில் நுழைந்தார். அவர் நேராக ரோஹித் சர்மாவை நோக்கி ஓடினார்.  
 
குறித்த ரசிகர் அருகில் வந்தபோது, திரும்பி பார்த்த ரோகித் சர்மா பயத்தில் பின்னே சில அடிகள் ஓடினார். உடனே பாதுகாவலர்கள் உள்ளே வந்து குறித்த ரசிகரை வெளியேற்றினர்.

அதற்கு முன்பாக இஷான் கிஷன் அவரை கட்டியணைத்து அனுப்பினார். இந்த நிலையில் ரோகித் சர்மா ரசிகரால் மிரண்டுபோனது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஏற்கனவே, 17 முறை டக் அவுட் என்ற மோசமான சாதனையை செய்த ரோஹித்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.