தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெறும் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

 
மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும்

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


குறித்த மூன்று தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிகமாக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளைய தினம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
 
இந்தநிலையில் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் உட்பட 1,300க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
இராஜகிரிய பிரதேசத்தில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகப் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலும் 42 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
அவற்றில் தேர்தல் சட்டம் மீறல் தொடர்பான 37 முறைப்பாடுகள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம் கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
 
அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் சட்டம் மீறல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.