நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி- தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்கள் இதுகுறித்து அறிவித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, நாட்டில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.அத்தியாவசியமற்ற அனைத்து செலவுகளுக்கும் நிதி அமைச்சரின் ஒப்புதல் அவசியம் என மற்றொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக நிதிச் செயலாளர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.