மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை..! வெளியாகிய புதிய தகவல்

சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் அதிகமான இலங்கை அகதிகளை வியட்நாம் தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.

கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு (08) 7 மணியளவில் வியட்நாம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாமில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் இவ்வாறு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

-------------------------------


சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு – மீட்கப்பட்ட இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!


சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனை வியட்நாம் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

மீட்கப்பட்ட அனைவரும் நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவர்களது குடியுரிமை மற்றும் ஏனைய தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் பின்னர் அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடனான படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியது.

அதன்படி, குறித்த நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கையில், ஆபத்தில் இருந்த படகுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஜப்பானிய சரக்குக் கப்பல், இலங்கையர்களைக் காப்பாற்றியது.