நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ஜனாதிபதி ரணில்!

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு பிரிவினருக்கும் இடையில்  இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோடு போராட்டக்களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தெரிவித்த அவர் பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.போராட்டத்தில் ஈடுபடும் சகல குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.