இன்று முடங்கப்போகும் தலைநகர்..! படையினர் குவிப்பு - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு


அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது நாடாளுமன்றம், அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, அலரிமாளிகை பிரதமர் அலுவலகம், காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக இன்றையதினம் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பேரணியை நடத்தவுள்ளனர்.

இவர்கள் அரச உயர் இடங்களுக்கு நுழைந்துவிடாதவாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் மருதானைப் பகுதியில் இருந்து புறக்கோட்டை ஊடாக கோட்டை பகுதிக்கு பேரணியாக செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அவர்கள் காலி முகத்திடல் பகுதி நோக்கி செல்லாத வகையில் தடைகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அரச கட்டிடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய முடியாதவாறு நீதிமன்ற தடையுத்தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.