இலங்கையை உலுக்கியுள்ள படகு விபத்து : கப்பலுடன் மோதியதாக தகவல், உயிரை காப்பாற்றாமல் பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள்



 


மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மாத்தறை தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுவதோடு, குறித்த படகு வணிகக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், விபத்தில் சிக்கியவர்களில் ஒரு மீனவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஏனைய நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக விசேட படகொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு, காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் பணியை மேலும் பல மீன்பிடி படகுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்து கரையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதேவேளை, களுத்துறை - பேருவளை மொரகல்ல பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் தனுஷா மெரீன் என்ற படகில் சென்றுள்ளதோடு, அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார ஆகியோர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடலில் விபத்துக்குள்ளான இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து மீனவர்களை மீட்பதற்காக பெல் 412 ஹெலிகொப்டரை பயன்படுத்துமாறு விமானப்படைக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேநேரம் இந்த விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க கரையில் இருந்த உயிர்காக்கும் அதிகாரிகளிடம் கோரிய போதும் விபத்துக்குள்ளான நபர்கள் நீரில் மூழ்கமாட்டார்கள் என அசமந்தமாக பதில் கூறியதாக அங்கிருந்த உறவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.