ஜனாதிபதி தேர்தலுக்கு பங்களிப்பு வழங்க தயார் என்கிறது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு

 


 ஜனாதிபதித்தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு அவசியமான போதிய வளங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
 
 இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித்தேர்தல் நடாத்தப்படவேண்டும். அதற்கமைய இலங்கையில் அனைத்துத்தரப்பினரையும் உள்வாங்கி, நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்வதற்குத் தாம் எதிர்பார்த்திருப்பதாக சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு தெரிவித்துள்ளது.
 
'நாம் இதற்கு முன்னதாக இலங்கையுடன் இணைந்து பணியாற்றிய சந்தர்ப்பங்களில் தேர்தல் பிரசார செலவினங்களை ஒழுங்குபடுத்தல், வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் போலித்தகவல் பரவலை முறியடித்தல், புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய தேர்தல் மறுசீரமைப்புக்களை சுட்டிக்காட்டியிருந்தோம்' எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
 
மேலும் தேர்தல் பிரசார செலவினங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும், இது அனைத்து வேட்பாளர்களும் சமமான நிலையிலிருந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கும் எனவும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின்போது இச்சட்டங்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.  

அத்தோடு உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் தொடர் தாமதம், உரிய காலப்பகுதியில் தேர்தல்களை நடாத்துவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்து சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு,
ஜனாதிபதித்தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு அவசியமான போதிய வளங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.