50 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி 2022.4. 9 ஆம் திகதி கொழும்பு - காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டாமே “கோட்டா கோ கம” போராட்டக்களமாகும்.

இப் போராட்டமானது இன்றுடன் 50 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனை முன்னிட்டு தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் இடம்பெற்று வருகின்றது. கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பேரணி, ஜனாதிபதி செயலகம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

பெருந்திரளான மக்கள் இப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். இதனால் இப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து ஆரம்பித்த “கோட்டா கோ கம” போராட்டம் நாளுக்கு நாள் புதிய சிந்தனைகளுடன் பிறிதொரு பரிமாணத்தைக் கண்டுவருகின்றது.