நாடாளுமன்ற பகுதியில் பதற்றம்: பலவந்தமாக கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சற்று முன் பலவந்தமாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்கள் ஆண்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம் செய்த தவறு என்ன என்பதை தெரிவித்து பின் தம்மை அழைத்துச் செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ள போதும் பெருந்திரளான பொலிஸார் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டு அனைவரும் பொலிஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். 

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரும் நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.