எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி


வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம் கேகாலை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் ஏற்கனவே மூவாயிரம் குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக நீரின் பயன்பாடு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது 6 நீர் வழங்கல் அமைப்புகளில் இருந்து மாத்திரமே நீர் விநியோகம் இடம்பெறுவதாகவும் இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக நீர் மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 70 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் மின் துண்டிப்பின்றி 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.


கடும் வெப்பநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மாவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் விரைவாக குறைந்து வருவதாகவும் அந்த நீர்த்தேக்கத்துடன் சம்பந்தப்பட்ட பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுக் காலை காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சாதாரண மட்டத்திலிருந்து 25 அடி குறைந்து காணப்பட்டதாகவும் அதேவேளை மாவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சாதாரண மட்டத்திலிருந்து 23 அடிவரை குறைந்து காணப்பட்டதாகவும் அந்த பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டாலும் தற்போது நீர் மின் மின்சார உற்பத்தியில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.