கல்வியங்காட்டில் வீடொன்றுக்கு முன்பாக வாள்வெட்டுத் தாக்குதல்!

நல்லூர் கல்வியங்காடு பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று(புதன்கிழமை) இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.