இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

குருணாகல், மாவத்தகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியின் பாதுகாப்புக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குழு மோதலில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ரஞ்சித் என்ற 28 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார்.

மோதலில் காயமடைந்த இருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு பிரிவினருக்கும் இடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அவருக்கு நெருக்கமானவர்கள் மோதலில் தலையிட்டதாகவும், மோதல் தீவிரமடைந்ததையடுத்து இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.