புகையிரத திணைக்கள பொது முகாமையாளரின் மரணத்தில் சந்தேகம் - பொலிஸார் தீவிர விசாரணை




இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டாரகேவின் மரணம் சந்தேகத்திற்கு இடமானது என பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

பொது முகாமையாளர் பண்டாரகே தங்கியிருந்த அறையின் குளியலறை மற்றும் ஏனைய சில இடங்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் பிரேதப் பரிசோதனை நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி விசாரணை அறிக்கையை எதிர்வரும் மாதம் 14ம் திகதி நீதிமன்றிடம் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரது சடலம் அனுராதபுரத்தில் அமைந்துள்ள புகையிரத திணைக்கள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டது.

வடக்கு புகையிரதப் பாதை நிர்மானப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக கள விஜயமொன்றை செய்திருந்த வேளை பண்டாரகே இவ்வாறு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.