13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பதாக அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும், அது தம்முடைய கருத்து என்றும் அவர் கூறினார்.
அதிகளவிலான தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவின் வளர்ச்சியின் இரகசியம் இந்த மாதிரியான அதிகாரபகிர்வு எனத் தெரிவித்த அவர், இலங்கையிலும் அதேபோன்று பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும், சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாம் எதிரானவர்கள் எனவும், அதற்கான மக்கள் ஆணை அதிபரிடம் இல்லை எனவும் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.