சீனியின் விலை மேலும் உயரும் சாத்தியம்!

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.இந்தியாவினால் சர்வதேச சந்தைக்கு சீனி உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டமை காரணமாகவே சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.உக்ரேன் உள்ளிட்ட மேலும் சில நெருக்கடிகள் காரணமாக இந்தியாவினால் சீனி, தானியங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், பங்களாதேஷ், மியன்மார், மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகள் இராஜதந்திர ரீதியாக மேற்கொண்ட தலையீடு காரணமாக இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தலையீடு செய்து சீனிக்கான இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.அத்தகைய நடவடிக்கை எடுக்காவிடின் சந்தையில் சீனிக்கான விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.