போதனா வைத்தியசாலை ஒன்றில் திடீர் மரணங்கள் பதிவு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சைப் பிரிவில் நோயாளர்கள் சிலர் திடீரென மரணமடைந்திருந்தனர்.

இதனையடுத்து, ஏனைய நோயாளர்களை வேறு பல வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குளியாப்பிட்டிய, நிகவெரட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளில் உள்ள கூழ்மப்பிரிப்பு சிகிச்சைப் பிரிவுகளுக்கு குறித்த நோயாளர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குருணாகல் போதனா வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்குள் 5 நோயாளர்கள் உயிரிழந்ததையடுத்து சிறுநீரக கூழ்மப்பிரிப்பு சிகிச்சை பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு குருநாகல் போதனா வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய சிறுநீரக கூழ்மப்பிரிப்பு மற்றும் இரத்தம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற இரு வைத்தியர்களைக் கொண்ட விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.