சுதந்திர தின பேரணியில் மயங்கி விழுந்த மாணவர்கள்! முகம்சுழிக்க வைக்கும் இராஜாங்க அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளின் செயல்


வவுனியாவில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பாண்ட் இசை அணிவகுப்புக்காக வருகை தந்த மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில்  நிற்க வைக்கப்பட்டமையால் 28 மாணவர்கள் உட்பட 31 பேர் மயங்கி விழுந்தனர்.

காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்தில் சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் அணிவகுப்போடு வவுனியா பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிகழ்வுகளும் அதிகமாக காணப்பட்டது, பாடசாலை மாணவர்களை மைதானத்தில் வெயிலின் மத்தியில் நிறுத்தி அனைத்து நிகழ்வுகளையும் நடத்தியதுடன் அதிதிகள் உட்பட அரச அதிகாரிகள் கொட்டகைகளுக்குள் வெயில் படாத வகையில் அமர்ந்து நிகழ்வுகளை பார்வையிட்டனர்.

இதன்போது சுமார் 28இற்கும் அதிகமான மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி அணியினர் முதலுதவி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் பாண்ட் இசைக்காக வந்திருந்த பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுவதை அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டு சென்ற போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் மேலும் பல மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் பலரும் அதிதி மற்றும் அரச அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாட்டை கண்டு முகம் சுழித்தனர்.