மாணவி வன்புணர்வு; தாய் உட்பட மூவர் கைது!


மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பொல்கஹாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொல்கஹாவல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவியே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செயதுள்ளதாக பொல்கஹாவல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் அதற்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாணவியின் தாய் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக பொல்கஹாவல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொல்கஹாவல நகரில் உள்ள இரண்டு தங்கும் விடுதிகளில் வைத்து குறித்த மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நபர்கள் பல முறை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதோடு தங்கும் விடுதிகளுக்குள் செல்வற்கு இன்னுமொரு பெண்ணின் அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளதாக விடுதி நிர்வாகத்தினர் காவல்துறையின் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி முதலில் மாணவர் படை பயிற்சியாளர் ஒருவரை காதலித்துள்ளதுடன் அந்த காதல் முறிவடைந்த பின்னர், முகநூலில் பொல்கஹாவல ஆரகொட பகுதியை சேர்ந்த திருமணமான நபர் ஒருவருடன் அறிமுகமாகி அவரை இரண்டாவதாக காதலித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாணவியின் முன்னாள் காதலன், மாணவியின் தாய் மற்றும் தங்குமிட விடுதியில் அறை வழங்கிய விடுதியின் ஊழியர் போன்ற மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாணவியின் முன்னாள் காதலன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவியின் தாய் மற்றும் விடுதி ஊழியர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவியின் இரண்டாவது காதலனான திருமணமான நபர் தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தப்பித்த நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.