பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கொழும்பிலும் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தப் போராட்டம் கொழும்பு புறக்கோட்டையில் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிலையில் கொழும்பிலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து இந்தக் கையெழுத்து பெறும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.எதிர்காலத்தின் நன்மை கருதி அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.