சிறிலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்பக் கடையை திறக்கலாம்: சாமர சம்பத் தஸநாயக்க

சிறிலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்ப கடை ஒன்றை நடத்தினால், சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான விமான சேவை நிறுவனமே நஷ்டத்தில் இயங்குகின்றது என்றால் அப்பக்கடையை திறப்பது தான் சிறந்த இலாபத்தைக் கொடுக்கும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (04) அளுத்கமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

அனுராதபுரத்தில் உள்ள பொஸ்பேட் நிறுவனம், நான் பொறுப்பேற்ற போது நிறுவனம் நஷ்டத்தில் சென்றுகொண்டிருந்தது, ஊழியர்களுக்கான சம்பளம் கூட வழங்க முடியாத மோசமான நிலையில் இருந்தது.

நான் பொறுப்பேற்ற பின் எட்டே மாதங்களில் 350 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கக்கூடிய அளவுக்கு நிறுவனத்தை முன்னேற்றியிருந்தேன்.

அதனால், எனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாவை என்னால் வழங்க முடியும்.

மாணிக்கல் ஏற்றுமதியின் மூலமாக 350 மில்லியன் ரூபா, பீ.சீ.சீ நிறுவனத்தின் மூலம் 100 மில்லியன்,சீமெந்து கூட்டுத்தாபனத்தின் மூலம் 100 மில்லியன் என, எனது அமைச்சின் கீழ் ஆயிரம் மில்லியன் ரூபாவை என்னால் அரசாங்கத்திற்கு வழங்க முடியும் என சாமர சம்பத் தஸநாயக்க இதன் போது குறிப்பிட்டுள்ளார்.