பல ஆண்டுகளாக பயன்படுத்தாத 3 விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில், அதாவது இலங்கை மதிப்பில் 26 கோடியே 61 இலட்சம் ரூபா தவணை பணமாக செலுத்தப்பட்டுள்ளது என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும இன்று பரபரப்பு தகவலை வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர்.
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் இன்றளவில் 22 விமானங்கள் உள்ளன. இவற்றில் 3 விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்ததாத நிலையில் அவற்றுக்காக மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணை பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய விமானச்சேரிடங்களுக்கு சேவையை வழங்குகிறது.
கடந்த கால அரசாங்கங்கள் சந்தை விலைக்கு மாறாக அதிக விலைக்கு குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்துள்ளன.
பாரிய நிதி மோசடிக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் குறித்து தேசிய நீதிக்கட்டமைப்பிலும், சர்வதேச நாடுகளின் நீதிமன்றங்களிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டு இடம்பெற்ற மோசடிகளால் குறித்த நிறுவனம் மாத்திரமல்ல வாழ்க்கையில் ஒரு முறை கூட விமானத்தில் பயணிக்காத மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஊழல் மோசடிகள் குறித்து கடந்த காலங்களில் பல ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.அந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.