நான் ஈழத்தில் வாழவில்லை: முத்தையா முரளிதரன் விளக்கம்

"நான் மலையகத்தில் வாழ்ந்த மலையகத்தவர் என்பதனால் '800' திரைப்படம் முற்று முழுதாக மலையக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றினை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதே தவிர நான் ஈழத்தில் கால் பதிக்கவில்லை" என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

'800' திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் உள்ளடக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட சர்ச்சைகளிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,எனது பெற்றோர் மலையகத்தினை சேர்ந்தவர்கள், நான் மலையகத்தில் பிறந்து வளர்ந்த மலையகத்தவர் தான்.

நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை, ஈழத்தில் நடந்தவற்றினை நான் பார்க்கவில்லை, ஈழத்திற்கு சாதாரண மனிதர்களை போல சுற்றுலாவிற்கு மாத்திரமே சென்று வந்திருக்கின்றேன்.  

எனவே நான் பார்த்த எனது வாழ்க்கையில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரமே 800 திரைப்படத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

யுத்தம் என்பது அரசியல் சாதாரண கிரிக்கெட் வீரரான என்னால் அரசியல் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது.

நான் கருத்து தெரிவிப்பதனால் எதுவும் மாறப்போவதில்லை, நான் எனது குடும்பம், தொழில், வாழ்க்கை என்று வாழும் சாதாரண மனிதன் என்றும் பதிலளித்துள்ளார்.