பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அதிகரிக்கும் பிரச்சினைகள் : சஜித் காட்டம்

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்படவுள்ளதாகவும் இதனால் இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் (09) இடம்பெறுகின்ற நாடாளுமன்ற அமர்வில் நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியின் காரணமாக படிக்கும் குழந்தைகள், நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் என ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த குடும்பங்களின் மாதாந்த வருமான மட்டம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும், இதன் காரணமாக சிலர் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் அடிமையாக மாறி சிலர் தற்கொலைக்குக் கூட முயன்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்ப அலகின் வருமானம் குறைவது,செலவுகள் அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட்டிற்குப் பின்னர்,பாரியளவில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பில் 52% பங்களிக்கும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், முயற்சியாண்மையாளார்கள் நிர்க்கதி நிலையில் உள்ளனர்.

மேலும், பரேட் சட்டத்தின் ஊடாக அவர்களது சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருவதாகவும்,இதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது."என்றார்.

எனவே பரேட் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வெளிநாட்டு நிதியமொன்றை ஏற்படுத்தி இதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் அறிய விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே,தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2023 அறிக்கையின் பிரகாரம்,மொத்த சனத் தொகையில் 7 வீதமானோர் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வேறு விதமாக மாற்றியுள்ளனர் என்றும்,அறிக்கையின் பிரகாரம், 3 - 21 வயதுடையோரில் 54.9% ஆனோர் பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்மறையான தாக்கத்துக்குட்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது