நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் - கட்டுநாயக்கவில் கடும் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரிய அளவிலான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையே அதற்கு காரணமாகும்.

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதற்கமைய, அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதுடன், மாணவர்கள் கல்வி கற்க வெளிநாடுகளை நோக்கி செல்லும் நடவடிக்கைகளும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.

மேலும், வெளிநாடுகள் தமது பிரஜைகளை மீள அழைப்பதன் காரணமாகவும் சுற்றுலாப்பயணிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாலும் விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எப்படியிருப்பினும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்வரும் நுழைவு முனையம் அவ்வளவு பரபரப்பாக இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்றைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளத்துடன் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.