முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி




தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 79 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

பெனோனியில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. அணித் தலைவர் லோரா வொல்வார்ட் 63 பந்துகளில் 102 ஓட்டங்களை விளாசியதோடு மரிசான் சேப் 40 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றார்.


இந்நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 18.2 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஹர்ஷித சமரவிக்ரம பெற்ற 38 ஓட்டங்களுமே அதிகமாகும்.

மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது போட்டி நாளை (30) பொட்செப்ஸ்ரூமில் நடைபெறவுள்ளது.