சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள்..! வெளியான புதிய தகவல்


சர்வதேச கடற்பரப்பில் கனடாவிற்கு செல்லும் வழியில் நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த இலங்கை தமிழர்களை மீட்ட ஜப்பானிய கப்பல் அவர்களை வியட்நாம் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தது.

இந்நிலையில் இவ்வாறு சென்றவர்களில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி தென் சீனக் கடலில் வியட்நாமின் தெற்கு கடலோர வுங் தோ முனையில் (Vung Tau Cape) இருந்து 258 கடல் மைல்கள் தொலைவில் சேதமடைந்த நிலையில் கடலில் சிக்குண்டது.

கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததால் அதிலிருந்தோர் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். இவ்வாறு தத்தளித்த குறித்த படகை தொடர்பு கொண்ட இலங்கை கடற்படையினர், படகை இயக்கிய குழுவினர் பயணிகளுடன் படகை கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் (MRCC) இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தது.

அதைத் தொடர்ந்து, ஜப்பானின் Helios Leader என்ற கப்பலைத் தொடர்பு கொண்டு, கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அனைவரையும் மீட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட அனைவரும் தெற்கு வியட்நாமில் உள்ள Vung Tau துறைமுகத்தில் வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த வகையில், மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுவதாக வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மீட்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.