இலங்கை தமிழர் பிரான்ஸில் கைது

பிரான்ஸில் இலங்கைத் தமிழர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் மொன்தோபான் (Montauban) A20 சுங்கச்சாவடியில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கையர் பொபினி பகுதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் இருந்து சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் 40 வயதுடைய குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

500 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை பாரிஸிற்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டின் பெறுமதி 51000 யூரோ என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேகநபர் ஸ்பெயினில் இருந்து துலுஸ் சென்று அங்கிருந்து பாரிஸ் செல்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். சென்ரெனிஸ், வாழும் நண்பர் ஒருவரால் 1000 யூரோ வழங்கப்பட்டதாகவும், அதற்கமைய, தான் இந்த சிகரெட்டுகளை கடத்தி வந்ததாகவும், இதுவே முதல் முறை எனவும் கைதான இலங்கையர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை தமிழர் பிரெஞ்சு மொழி தெரியாதவர் என்பதனால் அவரது மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் இந்த விடயங்களை காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தான் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் சாரதி என குறிப்பிட்டதுடன், தான் தனது குடும்பத்துடன் பாரிஸில் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டிற்கு தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.