இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.மார்ச் 31 அன்று நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இது குறித்து கடந்த டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ் ஜெய்சங்கர் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.இதேவேளை இந்திய அமைச்சரின் அழைப்பின் பேரில் தாம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.மேலும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் பீரிஸ் குறிப்பிட்டார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.