லண்டனில் இருந்து நாடு திரும்பிய நபர் கைது


லண்டனிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம்(11.11.2024) விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் லண்டனிலிருந்து, இன்றைய தினம் காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரது கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று, பின்னர் அங்கிருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.