எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்!

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்களில் மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சாடியுள்ளது.தடுப்பூசி பெற்றுக்கொள்ளல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றின் மூலமாகவே இந்த அபாயத்திலிருந்து மீள முடியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் அடிப்படை சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் எனவும் இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ஒமிக்ரோன் பிறழ்வானது டெல்டாவை விட வீரியம் குறைவானதாகக் காணப்பட்டாலும் வேகமாகப் பரவும் திறனைக் கொண்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இதனால் கொரோனா நோயாளர்கள் சடுதியாக அதிகரிக்கும் போது வைத்தியசாலை கட்டமைப்புக்களும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.எனவே வைத்தியசாலை ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகி அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால் மருத்துவ சேவையும் மந்தமடையும் என்றும் இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.