இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்க நேரிடும் : பந்துல குணவர்தன

இலங்கை போக்குவரத்து சபை 2024 ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டவில்லையெனில், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தவிர்க்க வேண்டுமாயின், இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் பல எண்ணிம திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான காவல்துறை விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.