இலங்கை இளநீருக்கு வந்த கேள்வி - பல பில்லியன்களை சம்பாதிக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் இளநீர் தேவை டுபாய் சந்தையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கே உரித்தான இளநீருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிக தேவை காணப்பட்டாலும் கடந்த காலங்களில் இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல பண பரிவர்த்தனைகள் உண்டியல் ஊடாக மேற்கொள்ளப்பட்டமையினால் நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை முறைமை ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு இளநீர் தற்போது 0.8 டொலர்களுக்கு ( 296 ரூபாய்) அந்நாட்டு துறைமுகத்தில் பெறப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இளநீர் டுபாய் சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர் ஒன்று அந்நாட்டின் கரையோரப் பகுதியில் 2500 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெளிநாட்டு சந்தையில் இளநீருக்கான தேவை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கை சந்தையிலும் இளநீர் விலை அதிகரிக்கலாம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 06 பில்லியன் ரூபா எனவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.