மேற்குலக நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ள இலங்கை! வெளியான தகவல்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. 

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பில் மேற்குலக நாடுகள் பிறப்பித்துள்ள தடை இலங்கையை பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தடை விதிக்காத காரணத்தினால் எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கமும் ரஸ்யாவிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.

சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையை விடவும் குறைந்த விலையில் ரஷ்யா எரிபொருளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்தால் அரசாங்கத்திற்கு குறைந்த விலையில் எரிபொருளை மக்களுக்கு வழங்க முடியும் என அந்த தெற்கு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.