இனப்பிளவுகளை ஆழப்படுத்தும் ரணில் அரசாங்கம்: மீனாட்சி கங்குலி விமர்சனம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க 'நல்லிணக்கம்' பற்றி பேசுகின்றார், ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்,

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"மூன்று தசாபத்தங்களாக (1983-2009) நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது தமிழர்களை தடுத்து வைத்துள்ளனர்.

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு சட்டம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்திருந்த போதும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்வது மாத்திரமன்றி அதனை இரத்து செய்யும் வரை அதனை பயன்படுத்த தடை வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவது கொடூரமான துஸ்பிரயோகம் ஆகும்.

ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் ஓரங்கட்டுகிறது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் கூறியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க 'நல்லிணக்கம்' பற்றி பேசுகின்றார், ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப் பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று அவர் விமர்சித்துள்ளார்

மேலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நவம்பர் 25 மற்றும் 27 க்கு இடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதிகாரிகள் இந்த 9 பேரையும் கைது செய்தனர், நினைவேந்தல் ஊர்வலத்தில் இருந்து அலங்காரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர் என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

பின்னர், டிசம்பர் 2 ஆம் திகதி வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒதியமலையில் 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் தமிழ் கிராம மக்களை படுகொலை செய்ததை நினைவுகூரும் வகையில், இந்து ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வை இலங்கை காவல்துறையினர் முடக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன மற்றும் மத சிறுபான்மையினர் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதைத் தடுப்பது மதம், நம்பிக்கை, கருத்துச் சுதந்திரம் மற்றும் கூட்டுறவுக்கான உரிமைகளை மீறுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.